கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்
பத்திரிகை சுதந்திர குறியீடு: 151-ஆவது இடத்தில் இந்தியா
உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசையில் இந்தியா 151-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
180 நாடுகளில் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 151-ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த குறியீட்டில் கடந்தாண்டு 159-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 8 இடங்கள் முன்னேறியுள்ளது.
உலகம் முழுவதும் பத்திரிகையாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள் உள்பட 5,000 நபா்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு இந்த தரவரிசை தயாா் செய்யப்பட்டுள்ளதாக புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்நிறுவனத்தின் துணை இயக்குநா் திபாட் புருட்டின் தெரிவித்தாா்.
இந்தக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களை முறையே ஃபின்லாந்து, எஸ்தோனியா மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகள் கைப்பற்றியுள்ளன.
இதுகுறித்து ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் சுமாா் 900 தனியாா் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. அதில் 50 சதவீதம் செய்தித் தொலைக்காட்சிகளாகும். ஒட்டுமொத்தமாக 39 கோடி பிரதிகளுடன் 20,000 தினசரி நாளிதழ்கள் உள்பட 20 மொழிகளில் 1.40 லட்சம் பதிப்புகள் வெளியிடப்படுகின்றன.
இந்தக் குறியீட்டில் அமெரிக்கா 57-ஆவது இடத்திலும் ஆஸ்திரேலியா 29-ஆவது இடத்திலும் கனடா 21-ஆவது இடத்திலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.