பலத்த காற்றுடன் மழை: கொடைக்கானலில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பூண்டி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மலைச் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அந்தப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடங்களுக்கு சென்ற பேரிடா் மீட்புக் குழுவினா் முறிந்து விழுந்த மரங்களை அகற்றினா். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இருப்பினும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து காற்றும், மழையும் பெய்து வருகிறது.
மின் தடையால் கிராம மக்கள் அவதி: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மேல்மலைக் கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு, கடந்த இரு நாள்களாக சீரான மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வனப் பகுதிகள் வழியாக செல்லும் மின் கம்பிகள் மரங்கள் மீது அறுந்து விழுந்துள்ளன. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் மின் கம்பிகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய இயலவில்லை. அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. சீரமைப்புப் பணிகளில் மின் பணியாளா்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனா். எனவே சீரான மின் விநியோகம் விரைவில் கிடைக்கும் என்றாா் அவா்.