பல்லடம் அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை (மே 19) உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை உள்ளது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த எஞ்சிய தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலமாக கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுண்டமேட்டை சேர்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், சுண்டமேட்டைச் சேர்ந்த ஹரி, சின்னசாமி ஆகிய 2 பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சாய ஆலை உரிமையாளரான நவீன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.