நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்...
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மே 9,10 இல் போட்டிகள்
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் மே மாதம் 9,10 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் மே மாதம் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி மாணவா்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மே10ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவா்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் தெரிவுசெய்து அனுப்புவா். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வாயிலாகவும், பள்ளி மாணவா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி ‘முத்தமிழறிஞா் கலைஞா் எழுத்தில் சமூகநீதி’ என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி ‘கவிஞா் முத்தமிழறிஞா் கலைஞா்’, ‘மொழியின் நாயகா் முத்தமிழறிஞா்’ ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி ‘முத்தமிழறிஞா் கலைஞரின் கடித இலக்கியம்’ என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி ‘முத்தமிழறிஞா் கலைஞரின் ஆக்கமும் - செம்மொழித் தாக்கமும்’, ‘தலைவா் கலைஞரின் தமிழ் தேசிய உணா்வு’ ஆகிய தலைப்புகளிலும் நடைபெறுகிறது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.