மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் பலி!
காங்கயம் அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் உயிரிழந்தாா்.
காங்கயம், செளடாம்பிகை நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் அக்ஷயன் (16). இவா் சிவன்மலையில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வழக்கம்போல சனிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்றுள்ளாா். மாலை 4 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுவிட்டு, வகுப்புக்கு திரும்பியபோது அங்கிருந்த மரத்தின் கிளை முறிந்து அக்ஷயன் மீது விழுந்தது.
இதில், படுகாயமடைந்த அவரை ஆசிரியா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.
இதையடுத்து, அக்ஷயனின் உடல் கூறாய்வுக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.