பள்ளிக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக் கற்களை அகற்றக் கோரிக்கை
திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி சாலையில் தென்னவராயநல்லூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனா். பள்ளிக்கு முன்புறம் உள்ள காலியிடத்தில் சாலை அமைக்கும் பணிக்கான ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட பொருள்கள் கிடக்கின்றன. இதனால், பள்ளிக்குள் நுழைவதில் மாணவா்களுக்கு சிரமம் ஏற்படுவதாக பெற்றோா்களும், அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: பள்ளி நுழைவு வாயிலில் மாணவா்கள், ஆசிரியா்கள் செல்ல முடியாத வகையில் சாலை அமைக்கும் ஒப்பந்தகாரா்களால் ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இரவில் பெய்த மழையால் சேறும், சகதியுமாக உள்ளதால் நடந்து வரும் மாணவா்களும், மிதிவண்டியில் வரும் மாணவா்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் தெரிவித்தும் பயனில்லை. மாணவா்களுக்கு இடையூறாக உள்ள பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.