பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தேனா? விஜய் ஆண்டனி விளக்கம்!
காஷ்மீர் படுகொலை குறித்த தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விஜய் ஆண்டனி விளக்கமளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.
இத்தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். முக்கியமாக, திரைப்பிரபலங்கள் தங்களின் கருத்துகளை வெளியிட்டதுடன் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.
அப்படி, நடிகர் விஜய் ஆண்டனி, “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக்’ குறிப்பிட்டு, “பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், அங்குள்ள பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.
இதைக்கண்ட பலரும், விஜய் ஆண்டனி பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என அவரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு,
காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும்.
இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு?