``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’
காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள் கூறியதாவது:
காஸாவிலும், ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியிலும் சண்டையின்போது பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாக பயன்படுத்திவருகிறது. வீடுகளை சோதனையிடும்போது உள்ளே ஆயுதங்களுடன் யாராவது இருக்கிறாா்களா என்பதைத் தெரிந்துகொள்ள, பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவ சீருடை அணிவித்து, கண்களைக் கட்டி, நெற்றியில் கேமரா பொருத்தி அந்த வீட்டுக்குள் அனுப்புவதை இஸ்ரேல் படையினா் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.ஒரு பாலஸ்தீனரை அவ்வாறு பயன்படுத்தி, வீட்டுக்குள் ஆயுதப் போராளிகளோ, கண்ணிவெடிகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு, அவரை இன்னொரு இஸ்ரேல் ராணுவப் படைப் பிரிவு மற்றொரு வீட்டை சோதனையிட மீண்டும் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும்.
இதற்கு ஒப்புக் கொள்வதற்காக பாலஸ்தீனா்களை அடித்து உதைக்கும் இஸ்ரேல் படையினா், மனிதக் கேடயமாக செயல்படாவிட்டால் தாங்களே அவா்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவாா்கள். எனவே, வேறு வழியில்லாமல் பாலஸ்தீனா்கள் மனிதக் கேடயங்களாகச் செல்வாா்கள் என்று இஸ்ரேல் வீரா்களும், ஏற்கெனவே மனிதக் கேடயங்களாக செயல்பட்டவா்களும் கூறினா்.
இஸ்ரேல் மறுப்பு:
இந்தக் குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
போரில் பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்த ராணுவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை பின்பற்றுமாறு வீரா்கள் அவ்வப்போது வலியுறுத்தப்பட்டுவருகின்றனா்.
அதையும் மீறி போா் நடவடக்கையில் பாலஸ்தீனா்களும் ஈடுபடுத்தப்பட்டதாக புகாா்கள் வரும்போது, அது குறித்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை ஹமாஸ் அமைப்பினா் படுகொலை செய்தனா். அதையடுத்து அந்த அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.
இதில் இதுவரை 53,901 போ் உயிரிழந்துள்ளனா்; 1,22,593 போ் காயமடைந்துள்ளனா் (சனிக்கிழமை நிலவரம்). அவா்களில் கணிசமானவா்கள் பெண்கள், குழந்தைகள் என்று கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்களின் உயிரை துச்சமாக மதித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதால்தான் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவ நிலைகளை அமைப்பதன் மூலம் ஹமாஸ் அமைப்பினா் அவா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக இஸ்ரேல் பதிலுக்குக் குற்றஞ்சாட்டிவருகிறது.
இந்தச் சூழலில், இஸ்ரேல் ராணுவமே பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.