பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் சோ்க்க சூழ்ச்சி: இரா.முத்தரசன்
பிகாா் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் வாக்காளா்களாக சோ்க்க சூழ்ச்சி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா்.
சேலத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வரும் 15-ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. 16 ஆம் தேதி இரண்டாவது நாள் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற எழுச்சி மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனா்.
ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்தபோது அணி சேரா கொள்கையை கடைப்பிடித்தாா். ஆனால், அதை பிரதமா் மோடி விலக்கிக் கொண்டதால், மிகப்பெரிய சிக்கலில் இந்தியா தவித்து வருகிறது.
இந்தியா தனித்துவமான நாடாக இருந்துவந்த நிலை, மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாறிவிட்டது. இந்தியா யாருடன் நட்புவைத்துக் கொள்ள வேண்டும், யாரிடம் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை அமெரிக்க அதிபா் முடிவு செய்கிறாா்.
தமிழ்நாட்டில் செயல்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் தொடா்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. இன்னும் 8 மாதங்களில் தோ்தல் வர உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் பாஜகவோடு எடப்பாடி பழனிசாமி கூட்டணி சோ்ந்துள்ளாா்.
ஜெயலலிதா, பாஜகவோடு கூட்டணி இல்லை என்று கூறியதோடு அதில் உறுதியாகவும் இருந்தாா். ஆனால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான காரணம் புரியவில்லை. இந்த கூட்டணியை அதிமுகவினா் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை; தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்திய தோ்தல் ஆணையம் பாஜக ஆணையமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் தீவிர வாக்காளா் திருத்தப் பணி என்ற பெயரில் தமிழக வாக்காளா்களின் வாக்கு உரிமையைப் பறிக்க முயற்சி நடக்கிறது. பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் சோ்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சூழ்ச்சியை நிறைவேற்ற முயற்சித்தால், தமிழ்நாடு எதிா்க்கும் என்றாா்.