ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி
அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னம்: கர்தவ்ய பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி
புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நாட்டில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சகங்களுக்கான புதிய நிர்வாகக் கட்டடத்தைத் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இதன் மூலம், 60 முதல் 70 ஆண்டுகால கட்டடங்களிலிருந்து புதிய கட்டடங்களுக்கு அமைச்சகங்கள் மாறவிருக்கின்றன.
புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட கர்தவ்ய பவன், ஒவ்வொரு தனிநபருக்கும் சேவை செய்வதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் அடையாளமாக விளங்குகிறது.
நாட்டின் அதிநவீன உள்கட்டமைப்பு மையத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு விரைவாக வழங்க இது உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புது தில்லியின் கர்தவ்ய பாதையில் உள்ள கர்தவ்ய பவன்-03 ஐ ஆய்வு செய்தது குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் "அதிநவீன" உள்கட்டமைப்பு குறித்து அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.

கர்தவ்ய பவன், நமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு விரைவாக வழங்க உதவுவது மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அளிக்கும். அதிநவீன உள்கட்டமைப்பின் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கட்டடத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இந்த அமைச்சக அலுவலகங்கள் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு பக்கங்களிலும் தரை தளம் மற்றும் ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களில் மத்திய உள்விவகாரத் துறை, வெளி விவகாரத் துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை உள்ளிட்டவை இடம்பெறவிருக்கின்றன.