கவனக்குறைவாக விளையாடுவது பேஸ்பால் தத்துவமல்ல..! கிரேக் சேப்பல் விமர்சனம்!
ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இங்கிலாந்தின் பேஸ்பால் கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியில் வென்று 2-2 எனத் தொடரை சமன்படுத்தியது.
இங்கிலாந்து அணி கடைசி போட்டியில் 301/4 ரன்களிலிருந்து 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. அவர்களது பேஸ்பால் அணுகுமுறை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இது குறித்து கிரேக் சேப்பல் பேசியதாவது:
கிரிக்கெட்டில் பகுத்துணர்வுமுக்கியம்
இந்தத் தொடரில் இங்கிலாந்தின் முன்மாதிரியாக ஹாரி புரூக் பேட்டிங் இருந்தது. நான் அவரை இதற்கு முன்பாக மிகவும் புகழ்ந்து பேசியுள்ளேன்.
ஹாரி புரூக்கிடம் டைமிங், எங்கு வேண்டுமானாலும் அடிக்கும் ஆற்றல், நம்பிக்கை, எளிதாக பேட்டிங் ஆடும் திறமை இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாட் அடிப்பதை விட பகுத்துணர்வு முக்கியமானது.
எப்போது அதிரடியாக ஆட வேண்டும் எப்போது பொறுமையாக ஆட வேண்டுமென தெரிந்திருக்க வேண்டும்.
ஓவலில் புரூக் ஆட்டமிழந்தது சிக்கலுக்கான அறிகுறியாக இருந்தது.
பேஸ்பாலின் தத்துவம் என்ன?
பேஸ்பாலின் தத்துவம் - பயமில்லாத, அதிரடியான கிரிக்கெட் அவர்களது அணுகுமுறையை புத்துயுர்ப்படைய வைத்துள்ளது. ஆனால், அதை கடினமாக விளையாடி அதை சொதப்பக்கூடாது.
இங்கிலாந்து வீரர்களில் ஒருவராவது அவர்களது வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அழுத்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஹாரி புரூக் பகட்டான ஷாட் அடித்து அதற்கான வெகுமதியைப் பெற்றார்.
நேர்மறையாக விளையாடுவதில் தவறில்லை. ஆனால், அதற்காக கவனக்குறைவாக விளையாடக் கூடாது.
இந்தியா தார்மீக வெற்றி
நம்பிக்கையுடன் திட்டமிடப்பட்டு விளையாட வேண்டும். புரூக் இப்போதுதான் வளர்ந்து வருகிறார். அவர் இதைக் கற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.
போட்டிய வெல்ல வேண்டுமெனில் அவர் இந்த அதிரடியுடன் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். ஜோ ரூட் இடத்தை ஹாரி புரூக் நிரப்ப வேண்டும்.
இருபக்கமும் ஹுரோயிசம் நடந்தது. உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வு ரீதியாக சோதிக்கப்பட்டது. ஆனால், இந்தியா தார்மீக வெற்றி பெற்றது. அவர்கள் தெளிவாக, அடையாளத்துடன் நோக்கத்துடன் வென்றார்கள் என்றார்.