"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு
புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளார்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவை நக்சலைட்டு இல்லாத நாடாக மாற்றுவதில் "பெரிய வெற்றி" என்று உள்துறை அமைச்சர் ஷா விவரித்தார்.
"இந்தியாவை நக்சலைட்டு இல்லாத நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில், பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கையில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன," என்று அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது நமது துணிச்சலான வீரர்கள் 2 பேரை இழந்துள்ளோம். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த அந்த மாவீரர்களுக்கு தேசம் எப்போதும் கடன்பட்டிருக்கும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஷா கூறினார்.
உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்
"2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சல் தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிப்போம், நக்சலிசத்தால் நாட்டின் எந்தவொரு குடிமகனும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்," என்று அவர் மேலும் கூறினார்.
நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது காயமடைந்த 2 வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்து விமானம் மூலம் ராயப்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் தற்போது ஆபத்தில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது, மற்றொருவருக்கு தலை மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.