விமானப் படையின் மகா கும்பமேளா இது: விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராஜ்நாத்!
பெங்களூருவில் ஏரோ இந்தியா - 2025 விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை இன்று (பிப்.10) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.
ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த 150 நிறுவனங்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட விமானத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தி துறையின் பாதுகாப்பு கண்காட்சி நிறுவனம் நடத்துகிறது.
வரலாற்றில் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களான ரஷியாவின் எஸ்யு-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 ஆகியவை பங்கேற்கின்றன.
இதையும் படிக்க: கும்பமேளாவில் அலைமோதும் கூட்டம்! ரயில் என்ஜினில் ஏறிய பயணிகளால் பரபரப்பு!
இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “நிச்சயமற்ற இவ்வுலகில் இந்திய மண்ணின் வலிமையையும் மீள்திறனையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துவதால் இது மகா கும்பமேளாவைப் போன்றது.” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்தியாவில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஏரோ இந்தியா வடிவில் மற்றொரு கும்பமேளா வெளிவருகிறது. பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் சுயமரியாதை கும்பமேளா ஒரு பக்கம், ஏரோ இந்தியாவின் ஆராய்ச்சி கும்பமேளா மறுபக்கம்.
பிரயாக்ராஜ் கும்பமேளா உட்புறத்தை வலுப்படுத்தவதில் கவனம் செலுத்துகிறது, ஏரோ இந்தியா கும்பமேளா வெளிப்புறத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
பிரயாக்ராஜ் இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிபடுத்துகிறது, ஏரோ இந்தியா இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது.
ஒரு புறம் பாரம்பரியம், ஆன்மிகத்தின் மகாகும்பமேளா, மறுபுறம் ஆயுதம் மற்றும் தைரியத்தின் மகா கும்பமேளா நடைபெறுகிறது.” என்றார்.