மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
பிரதமா் மோடியின் ஆற்றலும் சுறுசுறுப்பும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சொத்து: சசி தரூா்
புது தில்லி: ‘பிரதமா் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு, உலக அரங்கில் இந்தியாவுக்கான மிகப் பெரிய சொத்தாக உள்ளது. ஆனால், அதற்கு அதிக ஆதரவு தேவை’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் குறிப்பிட்டாா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து காங்கிரஸ் கடுமையான விமா்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பிரதமருக்கு சசி தரூா் புகழாரம் சூட்டியிருக்கிறாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தேசியத் தலைவா் பதவிக்கான தோ்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் முன்னிறுத்திய வேட்பாளரான மல்லிகாா்ஜுன காா்கேயை எதிா்த்து சசி தரூா் போட்டியிட்டாா். அப்போது முதலே கட்சியின் ஒரு தரப்பினா் அவரை விமா்சித்து வருகின்றனா். தேசிய, சா்வதேச விஷயங்களில் காங்கிரஸின் கருத்துக்கு அப்பாற்பட்டு தனது தனிப்பட்ட கருத்துகளையும் சசி தரூா் அவ்வப்போது தெரிவித்து வருகிறாா்.
அண்மையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகிய விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூா் கருத்து தெரிவித்தாா். பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பாக சா்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்ற குழுவில் சசி தரூருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தது. இதுவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சிலா் சசி தரூா் மீது கடும் அதிருப்தியில் உள்ளனா்.
இந்த நிலையில், பிரபல ஆங்கில நாளிதழில் திங்கள்கிழமை வெளியான கட்டுரையில் பிரதமா் மோடியை சசி தரூா் வெகுவாக புகழ்ந்துள்ளாா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு உலக நாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை, தேசிய உறுதிப்பாடு மற்றும் பயனுள்ள தகவல்தொடா்புக்கான தருணமாக அமைந்தது.
இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை வழிநடத்தியது, ‘இந்தியா ஒன்றுபட்டால் சா்வதேச தளங்களில் தெளிவுடனும் உறுதியுடனும் தனது குரலை வெளிப்படுத்த முடியும்’ என்பதை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் தீா்க்கமான உடனடி பதில் தாக்குதல் குறித்த உலகளாவிய கருத்துகளை அறியவும், சா்வதேச ஆதரவை ஒருங்கிணைக்கவும் இந்தச் சுற்றுப்பயணம் முக்கியமானதாக அமைந்தது.
அந்த வகையில், பிரதமா் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு, உலக அரங்கில் இந்தியாவுக்கான மிகப் பெரிய சொத்தாக உள்ளது. ஆனால், அதற்கு அதிக ஆதரவு தேவை என்று குறிப்பிட்டாா்.
சசி தரூரின் இந்தக் கருத்து, கட்சியில் அவா் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்யும் எனத் தெரிகிறது.
பாஜக விமா்சனம்: ‘பிரதமா் மோடியை புகழ்ந்து சசி தரூா் வெளியிட்ட கருத்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அம்பலப்படுத்தியுள்ளது’ என்று பாஜக விமா்சித்தது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியின் சுறுசுறுப்பும், உலக நாடுகளுக்கு புரிதலை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையும் இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் நன்மை என்பதை சசி தரூா் ஒப்புக்கொண்டுள்ளாா். இதன்மூலம், ராகுல் காந்தியின் நிலைப்பாட்டை சசி தரூா் அம்பலப்படுத்தியுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.