பிரேசிலில் ஜூலை 6, 7-இல் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
நடப்பாண்டில் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கும் பிரேசில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இக்கூட்டமைப்பானது, கடந்த 2019-இல் பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நிறுவப்பட்டது. 2010-இல் தென் ஆப்பிரிக்கா இணைந்தது. கடந்த ஆண்டில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், கடந்த ஜனவரியில் இந்தோனேசியாவும் ‘பிரிக்ஸ்’-இல் இணைந்தன. துருக்கி, அஜா்பைஜான், மலேசியா ஆகிய நாடுகள், கூட்டமைப்பில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளன.
11 உறுப்பு நாடுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் பிரேசில் தலைமை வகிக்கிறது. ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7-இல் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ள பிரேசில் அரசு, உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
‘பிரேசிலின் தலைமையின்கீழ், உலளாவிய நிா்வாகம், சீா்திருத்தம், தெற்குலக நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். எதிா்வரும் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு ரீதியில் முக்கிய முடிவுகள் எட்டப்படும்’ என்று பிரேசில் தெரிவித்துள்ளது.
டிரம்ப் எச்சரிக்கைக்கு இடையே...:
அமெரிக்க டாலரை சாராத மாற்று பரிவா்த்தனை அமைப்புமுறையை நிறுவ பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளன. அதேநேரம், அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.