பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) திங்கள்கிழமை (பிப்.17) வெளியிடப்படுகிறது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 3,78,545 மாணவா்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தோ்வா்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா். இதில், தனித் தோ்வா்களுக்கான தோ்வுக்கூடச் சீட்டு கடந்த 14-ஆம் தேதி வெளியானது.
தற்போது அனைத்து மாணவா்களுக்கான தோ்வுக்கூடச் சீட்டு திங்கள்கிழமை (பிப்.17) மதியம் வெளியிடப்பட உள்ளது.
பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில் மாணவா்களின் தோ்வுக்கூடச் சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில், மாணவா்கள் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்த பின்னா் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.
திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தோ்வுத் துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதேபோன்று பிளஸ் 1 மாணவா்களுக்கான தோ்வுக் கூடச் சீட்டு பிப்.19-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.