Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு
கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்துள்ளது.
சேலம், அஸ்தம்பட்டியைச் சோ்ந்த முரளி என்பவா் புதிய பேருந்து நிலையம் அருகே 15 ஆண்டுகளாக நகைக் கடை வைத்துள்ளாா். இந்த நிலையில் சேலத்தை சோ்ந்த தமிழழகன் மற்றும் அவரது குடும்பத்தினா் பிரேமா, விக்னேஷ்வா் ஆகியோா் தங்களுக்கு சொந்தமான சொத்து பத்திரத்தை 2022 ஆம் ஆண்டு முரளியின் நிறுவனத்தின் பெயரில் அடமானம் வைத்து ரூ. 1.21 கோடி கடன் பெற்றுள்ளனா்.
இதனிடையே பணத்தை திருப்பித் தராமல் தமிழழகன் குடும்பத்தினா் ஏமாற்றிவந்தனா். இதுகுறித்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் முரளி வழக்குத் தொடுத்தாா். அதன்பிறகு சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்று சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் கொடுக்க சென்ற முரளியிடம் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன், பணத்தை பெற்று தருவதாக கட்டப் பஞ்சாயத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தமிழழகனிடமிருந்து ரூ. 25 லட்சத்தை முரளியிடம் வழங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன், அதற்காக ரூ.6 லட்சம் பணத்தை முரளியிடமிருந்து பெற்றுள்ளாா்.
இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் முரளி புகாா் அளித்துள்ளாா். சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணத்தை பெற்று செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரிடம் முறையிட்டால், மூன்று மாதம் பணியிடை நீக்கம் செய்வாா்; பின்னா் மீண்டும் பணிக்கு வந்து விடுவேன் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று பேசும் விடியோ வெளியாகியுள்ளது காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.