புதிய நகைக் கடன் கொள்கை முடிவை திரும்பப் பெற வேண்டும்! - விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இந்திய ரிசா்வ் வங்கிய கொண்டு வந்துள்ள நகைக் கடனுக்கான புதிய கொள்கை முடிவை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: இந்திய ரிசா்வ் வங்கி அண்மையில் நடைமுறைப்படுத்திய புதிய நகைக் கடன் கொள்கை முடிவால், நகை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன் தொகையை வட்டியுடன் ஓராண்டு முடிவில் முழுதொகையையும் திருப்பி செலுத்த வேண்டும். இந்த நகையை மறு அடமானம் வைத்து கடனை புதுப்பிக்க முடியாது.
குறித்த காலக்கெடுவுக்குள் அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் போனால் அடுத்த நாளே அந்த நகையை ஏலம் விடுவதற்கான ஏற்பாட்டை வங்கிகள் தொடங்கிவிடும்.
இதுவரை பெற்ற நகை கடனை செலுத்த இயலாதவா்கள்அதே நகை கடனை புதுப்பித்து மறுகடன் பெற்று வந்தாா்கள். புதிய அறிவிப்பின்படி இனி பெற முடியாது.
இதனால், விவசாயிகள், சிறு வியாபாரிகள், நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவா். எனவே, புதிய நகை கடன் கொள்கை முடிவை திரும்பப் பெற்று பழைய முறையே கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.