புதுச்சேரி: ``நிலம், ஒப்புதல் உடனே தருகிறோம், முதலீடு செய்யுங்கள்!'' - தொழில் துவங்க ஆளுநர் அழைப்பு
புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின், இரண்டாவது தென்னிந்திய கவுன்சில் கூட்டத்தை ஆளுநர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன், ``புவியியல் ரீதியாக புதுச்சேரி சிறிய மாநிலம். அதேசமயம் இதன் கலாசாரம், வலுவான கல்வி நிறுவனங்கள், அமைதியான சூழல், தொழில்துறை முதலீட்டுக்கான முக்கிய இடமாக இருக்கிறது.
பிரதமர் மோடி துவங்கிய மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, கேதி சக்தி போன்ற முதன்மை திட்டங்கள் நாடு முழுவதும் தொழில் துறையை எழுச்சிபெற வைத்திருக்கிறது.

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவியபோது கூட, அந்நிய முதலீடு மற்றும் ஏற்றுமதியில் வளர்ச்சியை கண்டோம்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள், கடல் சார்ந்த தொழில்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. புதுச்சேரியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு வசதியாக, விமான சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொழில்துறை நலனுக்காக கரசானூரில் 750 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் புதுச்சேரியில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி தொழிலதிபர்களை கேட்டுக் கொள்கிறேன். புதுச்சேரியில் தொழில் துவங்குவதற்கான அனைத்து ஒப்புதல்களும் உடனடியாக வழங்கப்படும்” என்றார்.