புதுச்சேரி: `மக்கள் ஏமாந்தது அவர்களுக்கே தெரியவில்லை!’ - `கோ ஃப்ரீ சைக்கிள்’ மோசடி குறித்து போலீஸ்
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட `கோ ஃபிரீ சைக்கிள்’ (Go Free Cycles) என்ற சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தன்னுடைய அலுவலகத்தை திறந்தது. அதே வேகத்தில், `புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் சைக்கிள் பயன்படுத்துகிறார்கள். அதனால் எங்களிடம் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ரூ.52.250 வருவாயாக கிடைக்கும்’ என்று விளம்பரப்படுத்தியது இந்த நிறுவனம். அதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்த நிலையில், `அதிக லாபம் கிடைக்கும் என பொதுமக்களுக்கு ஆசை காட்டி, அவர்களை முதலீடு செய்ய வைத்து இந்த நிறுவனம் முறைகேடு செய்கிறது’ என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார்கள் சென்றன. அதனடிப்படையில் அந்த நிறுவனத்தை சோதனை செய்யும்படி உத்தரவிட்டார் சைபர் கிரைம் எஸ்.பி பாஸ்கரன். அதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் கடந்த 3-ம் தேதி இரவு, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும் `கோ ஃபிரீ சைக்கிள்’ நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்தனர்.
தொடர்ந்து அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் மூடி அந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதையடுத்து அங்கு கட்டுக் கட்டாக இருந்த ரொக்கப் பணத்திற்கு கணக்கு கேட்டனர். அதற்கு அவர்களிடம் சரியான பதில் வராததால், வருவாய் துறையினர் மூலம் அந்த பணத்தை பறிமுதல் செய்து அங்கேயே அலமாரியில் வைத்து சீல் வைத்தனர். தொடர்ந்து அந்த அலுவலத்திற்கு சீல் வைத்த சைபர் கிரைம் போலீஸார், அமலாக்கத்துறைக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து கடந்த 6-ம் தேதி அமலாக்கத்துறை சென்னை பிரிவின் இணை இயக்குநர் நளினி ரவிகிருஷ்ணன் தலைமையில் வந்த அதிகாரிகள், சைக்கிள் நிறுவனத்தை சோதனை செய்தனர்.

இன்னும் மக்களுக்கு தெரியவில்லை
சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். அத்துடன் கோ ஃப்ரீ சைக்கிள் நிறுவனம் பணபரிவர்த்தனை செய்து வந்த 10 வங்கிக் கணக்குகளை முடக்கினர். ``இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் தங்கள் கிளைகளை திறந்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறது. தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதே இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். அவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.