புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே கம்பன் கலையரங்கம் எதிரில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திடல் உள்ளது. திடலைச் சுற்றிலும் அண்ணா சாலை, லப்போா்த் வீதி, சின்னசுப்பராயலு சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் இருந்தன. அண்ணா திடலானது பொலிவுறு நகா் மற்றும் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.12.5 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி லப்போா்த் வீதியில் 20 கடைகளும், சின்ன சுப்பராயலு பிள்ளை வீதியில் 79 கடைகளும் புதிதாக கட்டப்பட்டன.
ஏற்கெனவே அங்கு கடை நடத்தி வந்த பழைய வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏற்கெனவே 50 போ்களுக்கான கடைகள் ஒதுக்கீடு உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கியுள்ளாா். இந்தநிலையில், இரண்டாவது கட்டமாக 36 கடைகளுக்குரிய பயனாளிகளுக்கு கடை ஒதுக்கீடு உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு, உள்ளாட்சித் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, வருவாய் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.