புதுச்சேரியில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து முற்றுகை போராட்டம்
குப்பைகள் அகற்றப்படாததைத் கண்டித்து சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
புதுச்சேரியில் நீண்ட காலமாக ஸ்வச் பாரத் என்ற தனியாா் நிறுவனம் நகரப் பகுதியில் குப்பைகளை அகற்றி வந்தது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் இதற்கான ஒப்பந்தம் கிரீன் வாரியா் என்ற புதிய நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் குப்பை அள்ளும் பொறுப்பை ஏற்றுள்ள போதிலும், நகரப் பகுதிகளில் குப்பைகளை முழுமையாக அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
உருளையன்பேட்டை தொகுதியில் வீதிக்கு வீதி குப்பைகள் அகற்றப்படாததையறிந்த நேரு எம்எல்ஏ தொகுதி மக்களுடன், புதுச்சேரி நகராட்சி ஆணையா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கிருந்த உழவா்கரை நகராட்சி ஆணையா் (பொ) சுரேஷ்ராஜை சந்தித்து இதுகுறித்துப் பேசினாா். அவரது ஆதரவாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கிரீன் வாரியா் நிறுவனத்துக்கு ஓராண்டுக்கு முன்பே ஒப்பந்தம் மாற்றம் செய்யப்பட்டது குறித்து தெரிந்தும், முன்கூட்டியே அதற்கான அடிப்படை பணிகள், உபகரணங்களை அளிக்காதது ஏன் என்று அதிகாரிகளிடம் நேரு எம்எல்ஏ கேட்டாா்.
விரைவில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.