பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: இந்திய கொடியை பாகிஸ்தான் புறக்கணித்ததா?
நல்ல வாய்ப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் வங்கதேசம் விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அதன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுமே வலுவாக உள்ளது. ஆனால், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக பும்ரா என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறோம்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாகிஸ்தான் வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி!
இந்திய அணியில் அவர் இல்லாதது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வங்கதேசத்துக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. முகமது ஷமி அணியில் இணைந்துள்ளது மிகப் பெரிய விஷயம். அவர் உடல் தகுதியில் சற்று தடுமாறினாலும், முழு உடல் தகுதியுடன் பந்துவீசினால் வங்கதேசத்துக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்றார்.