பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா! நாசாவின் உற்சாக வரவேற்பு!
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட வீரர்கள் அனைவரும் திங்கள்கிழமையில் பூமி திரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 26-ஆம் தேதியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இவர்கள் ஜூலை 14 ஆம் தேதியில் பூமி திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
17 மணிநேரப் பயணத்துக்குப் பிறகு, இந்திய நேரப்படி மாலை 4.35 மணிக்கு பூமி திரும்புகையில் கடலில் டிராகன் விண்கலம் விழும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களின் வருகையின்போது, உற்சாக வரவேற்பு அளிக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையல் சென்றுள்ள இந்தக் குழுவில் இந்திய விமானப்படையின் அனுபவம் வாய்ந்த சுபான்ஷு சுக்லாவும் உள்ளார். இப்பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப்பின் விண்வெளிக்குச் சென்ற 2-ஆவது இந்திய வீரா்; சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமைகள் சுக்லாவுக்கு சொந்தமாகின.
அவர்கள் சென்றிருக்கும் இந்த 14 நாள் ஆய்வுப் பயணத்தில், இஸ்ரோ வடிவமைத்த 7 மைக்ரோகிராவிட்டி ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டது.
பூமியில் இருந்து 250 மைல்களுக்கு மேலே இருந்தவாறே, இரண்டு குழுவினரும் இணைந்து, 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை முடித்து, உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுமார் 230-க்கும் மேற்பட்ட சூரிய உதயங்களை இவர்கள் பார்த்துள்ளனர்.
இதையும் படிக்க:இந்தியாவிலும் கால்பதிக்கும் எலான் மஸ்க்! ஜூலை 15-ல் டெஸ்லா வருகை!