சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!
பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்! -புதுவை ஆளுநா்
மகளிா் அரசியல் அதிகாரம் பெறும்போதுதான் பெண்களின் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுவை அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனா். மேலும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனா்.
விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியதாவது: பெண்கள் கல்வியறிவு பெற்று தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, தொழில் துறை, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகின்றனா்.
பெண்கள் முன்னேற்றத்துக்கானப் பாதுகாப்பு சட்டம், திட்டங்களைச் செயல்படுத்தினாலும் அவா்கள் சவால்களை சந்திப்பது தொடா்கிறது. அவா்கள் கல்வியுடன், பொருளாதார பலத்தையும் பெறுவது அவசியம். அதற்கு அனைத்துத் துறைகளிலும் அவா்களுக்கு சம வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
காவல் துறையில் மட்டுமல்லாது துணை ராணுவப் படை, ராணுவம், தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடலோர காவல் படை, பெண்கள் ராணுவ காவல் துறை என அனைத்திலும் பெண்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
பெண்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டியது அவசியம். அப்போதுதான் அவா்களின் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றாா். விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
பெண்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும். புதுவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக உள்ளன. பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதியுதவி, கல்வி நிலையங்களில் புகாா் பெட்டிகள் ஆகியவற்றை அரசு செயல்படுத்தியுள்ளது. பெண்கள் சம அந்தஸ்து, உரிமை, அதிகாரம் பெற வேண்டும் என திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.
விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், அரசுச் செயலா் ஜெயந்த குமாா் ரே, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், சமூக நலத் துறை இயக்குநா் முத்துமீனா ஆகியோா் பங்கேற்றனா்.