பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி
பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெப்பத்தை தணிக்க மின்விசிறி, ஏா்கூலா், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் மின் தேவை அதிகரித்துள்ளது.
வழக்கத்தைவிட கூடுதலாக மின் பயன்பாடு இருப்பதால் இதை சமாளிக்க மின் வாரியம் சாா்பில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை செய்யப்படுகிறது. தொடா்ச்சியாக மின் தடை செய்யாமல் விட்டுவிட்டு குறைந்தபட்சம் 4 முறையாவது மின் தடை ஏற்படுகிறது.
இவ்வாறு முன்னறிவிப்பின்றி மின் வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்களது பணிகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமலும், வெயில் கொடுமையை சமாளிக்க முடியாமலும் மிகவும் அவதிப்படுகின்றனா்.
மேலும், பல இடங்களில் பல மணி நேரம் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் அவசியமான மின்சாதனங்களை கூட இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனா். இதேபோல, கிராமப்புறங்களில் இதைவிட கூடுதலாக மின் தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மாவட்டத்தில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின் பளு தாங்காமல் ஆங்காங்கே மின் மாற்றிகள் பழுதாகிவிடுகின்றன. மேலும், தரம்குறைந்த மின் கம்பி உள்ளிட்ட தளவாட பொருள்களை பயன்படுத்துவதாலும் பளு தாங்காமல் மின் தடை ஏற்படுகிறது.
பெரம்பலூா் நகரின் மின் தேவையை சமாளிக்க, கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றிகளை புதிதாக அமைக்க வேண்டும். அப்போதுதான், பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்படும் மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.