பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளிரவில் தனியாக சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை, ஒரு ஆண் பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு தப்பியோடிய காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பெங்களூரு காவல் துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களுடன் இன்று(ஏப். 7) பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வரா கூறியிருப்பதாவது: “பெரு நகரங்களில் இது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வது சகஜமே... இவ்விவகாரத்தில் சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவையனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்படும்.
காவல் துறை ஆணையரிடம் ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்ட மாந்தர்களின் புகலிடமாக உலகம் மாறிவிட்ட சூழலில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே செல்வதை வெட்டவெளிச்சமாகப் பார்க்க முடிகிறது.
அப்படியிருக்கையில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவரும் இந்தச் சவாலான காலகட்டத்தில், உயர் பொறுப்பிலிருக்கும் அமைச்சர் இத்தகைய கருத்தை தெரிவித்திருப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. கர்நாடகத்தில் எதிர்க்கட்சியான பாஜக அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்வினையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.