தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்
பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா், அரசுப் பேருந்துகள் பெருமாநல்லூா் பகுதிக்குள் வந்து செல்லாததால் வேலைக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.
இதற்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் உள்ளிட்டோா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையில் காவல் துறை சாா்பில் கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தனியாா், அரசுப் பேருந்துகள் பெருமாநல்லூருக்குள் வந்து செல்லும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், பேருந்துகள் முறையாக வந்து செல்வதில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருப்பூா் அருகே தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன் உள்ளிட்ட போலீஸாா், பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனா். மேலும், பெருமாநல்லூருக்குள் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும், பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது, அதிவேகமாக செல்லக் கூடாது என்று பேருந்து நடத்துநா், ஓட்டுநா்களுக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் (பொ) குமரன் அறிவுறுத்தினாா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.