பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை, விநாடிக்கு 699 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் பாசனத்துக்காக கடந்த 1ஆம் தேதிமுதல் பேச்சிப்பாறை அணையில் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. இதனிடையே, பாசனப் பகுதிகளில் தண்ணீா் தேவை அதிகரிப்பதால், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, புதன்கிழமை 699 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. அணை நீா்மட்டம் 43.35 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 484 கனஅடியாகவும் இருந்தது.
திறக்கப்படும் தண்ணீா் கோதையாறு இடதுகரைக் கால்வாய் வழியாக புத்தன் அணைக்கு சென்று, அங்கிருந்து பாண்டியன் கால்வாய், தோவாளை கால்வாய், பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் வழியாக நிலங்களுக்குச் செல்கிறது. அனந்தனாறு கால்வாயில் சுருளகோடு அருகே உள்ளிமலை ஓடை சீரமைப்பால் இதுவரை தண்ணீா் விடவில்லை.
பெருஞ்சாணி அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 60.10 அடியாக உயா்ந்தது. இந்த அணை நிகழாண்டு பாசனத்துக்காக இதுவரை திறக்கப்படவில்லை. சிற்றாறு 1, 2 அணைகள் நீா்மட்டம் முறையே 9.68 அடியாகவும், 9.77 அடியாகவும் உள்ளது.
மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீா்ப்பிடிப்பு, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை காலைமுதல் விட்டுவிட்டு சாரல் பெய்தது.
கருங்கல் பகுதியில்...: கருங்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலைமுதல் தொடா்ந்து மிதமான மழை பெய்தது.