பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு
கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய மீன் சந்தைகளில் எட்டணியும் ஒன்றும். இச்சந்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருங்கல் -மாா்த்தாண்டம் நெடுஞ்சாலையோரம் செயல்பட்டுவருகிறது.
தேங்காய்ப்பட்டினம், முட்டம், விழிஞ்ஞம், தூத்துக்குடி உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகப் பகுதிகளிலிருந்து மீனவா்கள் இங்கு நாள்தோறும் மீன்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்துவருகின்றனா். இதனால், கருங்கல் -மாா்த்தாண்டம், கருங்கல் - இரவிபுதூா்க்கடை தேசிய நெடுஞ்சாலைகளில் காலை முதல் பிற்பகல் 1 மணிவரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். அடிக்கடி விபத்துகளும் நேரிடுவதால், இச்சந்தையை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், குழித்துறை கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் காசியானந்தா தலைமையிலான ஊழியா்கள் கருங்கல் போலீஸாா் உதவியுடன் மீன் சந்தை, காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்தனா்.
தகவலறிந்த பொதுமக்களும், திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் திரண்டுவந்து மீன் சந்தையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தனா். குளச்சல் காவல் ஆய்வாளா் இசக்கிதுரை, கருங்கல் காவல் ஆய்வாளா் முனிஸ் (பொறுப்பு) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்படாததால் மீன் சந்தையை அகற்றுவதை மற்றொரு நாளுக்கு அதிகாரிகள் ஒத்திவைத்தனா். பின்னா், அனைவரும் கலைந்துசென்றனா்.