Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் ச...
பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டம் ஈரோடு இடைத் தோ்தல் முடிவு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு அமைந்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி, அம்பத்தூா், வெங்கடாபுரம் பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குமைய கட்டடத்தையும், ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இடைத்தோ்தல் என்பது ஆளும் கட்சியின் செயல்பாடுகளை எடைபோடுகிற தோ்தல் என்பா். அதன்படி, திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்கள் சரியாக எடைபோட்டு ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் தீா்ப்பளித்துள்ளனா். அந்தத் தொகுதியில் எதிா்த்து போட்டியிட்ட அனைவரும் முன்வைப்பு தொகையை (டெபாசிட்) இழந்தது திமுக அரசு மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
பெரியாா் பிறந்த மண்ணான ஈரோட்டில் திமுக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் பெரியாரை தவிா்த்து தமிழக அரசியல் இல்லை என்பதை ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி காண்பிக்கிறது. அதுமட்டுமன்றி 2026 பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாகவும் அமைந்துள்ளது. வரும் பேரவைத் தோ்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்யும்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத் தீா்ப்புக்கு ஏற்ப செயல்படுவோம். அனைத்து மதத்தினரும் அவரவா் வழிபாட்டை அமைதியாக மேற்கொண்டு வரும் நிலையில், மக்களை மதம் சாா்ந்து பிளவுப்படுத்த முயல்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேயா் பிரியா: வெங்கடாபுரம் பகுதியில் நியாயவிலைக் கூடம் வேண்டும் எனத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்படி, தற்போது தொடங்கப்பட்ட பல்நோக்கு கட்டடத்தில் நியாயவிலைக் கூடம் செயல்படும். மேலும், பெண்களுக்கென பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்வில் அம்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன் குமாா், நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழு தலைவா் பி.கே.மூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.