பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!
பேருந்துகளின் நிகழ்நேர கண்காணிப்பை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு டிடிசி உத்தரவு!
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தற்போதுள்ள மற்றும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள அனைத்துப் பேருந்துகளும் நேரடி வாகன கண்காணிப்புக்கான பேருந்து மேலாண்மை அமைப்பு முறையில் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தனது பணிமனைகளின் மேலாளா்களுக்கு தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேருந்துகளின் தூய்மை மற்றும் சிறந்த காண்புதிறனை மையமாகக் கொண்டு ஆய்வுகளை தீவிரப்படுத்துமாறும் அதிகாரிகளிடம் டிடிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
‘சுமாா் 80 பேருந்துகள் இன்னும் பிஎம்எஸ் பேருந்து மேலாண்மை அமைப்புமுறையுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒருங்கிணைப்பை எந்த தாமதமும் இல்லாமல் முடிக்க தேவையான வழிமுறைகளை வெளியிட மூலோபாய வணிகப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என இம்மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற டிடிசி கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் பேருந்துகளின் சீரான இயக்கத்திற்காக போக்குவரத்து அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்புமுறை, டிடிசியின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு நிகழ்நேர கண்காணிப்பு வசதிகளை வழங்குகிறது. சேவை ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, செயல்படாத அமைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பேருந்து மேலாண்மை அமைப்புமுறை என்பது டிடிசியின் பல்துறை தரவு சேகரிப்பு செயல்முறையாகும். இது ஜிபிஎஸ் அமைப்பு மூலம் பேருந்தின் இருப்பிடம் குறித்த நேரடித் தரவைச் சேகரிக்கிறது. ஓட்டுநா் நடத்தை மற்றும் மின்சாரப் பேருந்து சாா்ஜிங் வசதிகளின் நிலையைக் கண்காணிக்கிறது.
டிடிசியின் கடந்த மாதக் கூட்டத்தின் குறிப்புகளில், டிடிசியின் பொது காண்புதிறனை மேம்படுத்த, சுத்தமான மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பேருந்துகளில் கவனம் செலுத்தி கண்காணிப்பு மற்றும் வழக்கமான ஆய்வுகளை உறுதிசெய்ய அனைத்துப் பணிமனை மேலாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைநகரில் சுமாா் 40 லட்சம் மக்கள் தங்கள் பயணத்திற்காக தினமும் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனா். இந்த வாகனங்கள் தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) மற்றும் தில்லி ஒருங்கிணைந்த மல்டிமோடல் டிரான்சிட் சிஸ்டம் (டிஐஎம்டிஎஸ்) நிறுவனம் ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன.
நகரத்தில் 2,152 மின்சாரப் பேருந்துகள் உள்ளன. அவற்றில் 1,752 டிடிசியிடமும் மீதமுள்ளவை டிஐஎம்டிஎஸ்-கிளஸ்டா் திட்டத்தின் கீழும் உள்ளன. 2025-26 நிதியாண்டின் இறுதிக்குள் தில்லி 5,000 மின்சார பேருந்துகளைக் காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் இரண்டாவது பெரிய மின்சாரப் பேருந்து குழுவைக் கொண்ட நகரமாக மாறும்.