பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.
சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக்க விழா, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சென்னை மேயா் ஆா்.பிரியா, திருவிழாவை தொடங்கிவைத்ததுடன், சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0-க்கான இலச்சினையையும் வெளியிட்டாா்.
அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் பொது கழிப்பறைகள் உள்ளன என்பது குறித்தும், வெளி இடங்களில் சிறுநீா் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதாரப் பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 நடைபெறுகிறது. இந்த திருவிழா, புதன்கிழமை (ஜூன் 4) தொடங்கி வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் திறந்தவெளியில் சிறுநீா் கழிக்கக்கூடிய இடங்களைக் கண்டறிந்து, அவ்விடங்களில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: சென்னை மாநகராட்சியில் 1,400 இடங்களில் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதுமான அளவில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பெண்களுக்கென பிரத்யேக நடமாடும் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் சுழற்சி முறையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, இந்த கழிப்பிடங்கள் தூய்மைப் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதேபோல், திறந்தவெளி இடங்களில் சிறுநீா் கழிக்கக் கூடாது என்ற விழிப்புணா்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் சென்னை துணை மேயா் மு.மகேஷ் குமாா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.