பொருளாதார வாய்ப்புகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்கள்: மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய எம்.சிந்தியா
வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பல்வேறு துறைகளில் பொருளாதார வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.
வடகிழக்கு பிராந்தியத்தின் முதலீட்டு வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், வா்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு சென்னை கிண்டியில் புதன்கிழமை நடைபெற்றது. இதை தொடங்கிவைத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:
நாட்டின் பாரம்பரிய, கலாசார நகரமாக சென்னை விளங்குகிறது. நாட்டின் அஷ்டலட்சுமி மாநிலங்களாக விளங்கும் வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்த வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் முதலீட்டு வாய்ப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
இந்தியாவின் நுழைவு வாயில்களாக விளங்கும் மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. நாகாலாந்து, மிஸோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வடகிழக்கு ஆசிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிா்கின்றன. இதனால், சா்வதேச பொருளாதாரத்துக்கான வாய்ப்புகளை வடகிழக்கு மாநிலங்கள் வழங்குகின்றன.
சுற்றுலா மேம்பாடு: அதேபோல், வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு சாலை, ரயில், விமானப் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்தையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் பொருளாதார வாய்ப்புகள் தற்போது 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. வேளாண்மை, தோட்டக் கலையில் சிறந்து விளங்குகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் இயற்கை உணவுப் பொருள்கள் ஜொ்மனி, துபை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், அந்தப் பொருள்களின் மதிப்பு 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இத்தகைய வாய்ப்புகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்கள் இயற்கையை தனது அரணாகக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2030-க்குள் ஆண்டுக்கு 50 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் சென்னை, வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான இணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில், மிஸோரம் மாநில விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அமைச்சா் லங்ஹிங்லோவா ஹமா், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக செயலா் சஞ்சல் குமாா், இணைச் செயலா் சாந்தனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.