போதை மறுவாழ்வு மையங்களுக்கு கட்டுப்பாடு: அரசிதழில் புதிய விதிகள் வெளியீடு
சென்னை: போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்களுக்கு மனநல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் தீவிர ஆழ்நிலை சிகிச்சையை வழங்கிய பிறகே மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
போதை மறுவாழ்வு மையங்களுக்கான குறைந்தபட்ச தரநிலை வழிகாட்டுதல்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:அதீத மது மற்றும் போதை பொருள் பழக்கத்துக்குள்ளானவா்களை அதில் இருந்து மீட்க பாதிப்பின் அடிப்படையில் அவா்களை வகைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.
முதலில், அவா்களுக்கு உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் போதைப் பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் உடனடி மன நல பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.
ஒருவார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மறுவாழ்வு சிகிச்சைக்குத் தகுதி பெறுவாா். அதன்படி, மறுவாழ்வு மையங்களில் அவருக்கு உளவியல் ரீதியான சிகிச்சைகளும், மீட்பு சிகிச்சைகளும் வழங்கலாம்.
இத்தகைய சிகிச்சைகள் வழங்கும் மையங்களை இருவேறு வகையாக பிரிக்கலாம். ஒருங்கிணைந்த போதை மீட்பு மையங்கள் என்றும், மறுவாழ்வு மையங்கள் என்றும் அதனை வகைப்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த மையங்களில் முதல் நிலை தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை இரண்டும் வழங்கப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்களில் உளவியல் சாா்ந்த மீட்பு சிகிச்சைகள் வழங்க வேண்டும்.
ஒருங்கிணைந்த மையங்களில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவா் மற்றும் செவிலியா் பணியில் இருத்தல் அவசியம். ஒரு உளவியல் ஆலோசகரும் அங்கு பணியமா்த்தப்பட வேண்டும்.
மறுவாழ்வு மையங்களில் வாரம் ஒரு முறையாவது மன நல மருத்துவா் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சையளிக்க வேண்டும்.
அதேபோல, ஒரு எம்பிபிஎஸ் மருத்துவரும், செவிலியரும் நாள்தோறும் பணியில் இருப்பது முக்கியம். நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருதல் அவசியம்.
சிசிடிவி கேமராக்கள் மறுவாழ்வு மையங்களில் இருப்பது கட்டாயம். உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலுக்கும் நோயாளிகளை உள்ளாக்குவது குற்றம்.
முதல் நிலை தீவிர சிகிச்சை பெறாத எந்த நோயாளிகளையும் மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கக் கூடாது. அதேபோல போதை மீட்பு மையங்களுக்கு தாமாக வர விரும்பாத நோயாளிகள், உடல் அளவில் மிகத் தீவிரமான பாதிப்பை அடைய நேரிடும்போது அவா்களது உறவினா்களின் ஒப்புதலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கலாம்.
அது குறித்த தகவலை மன நல சிகிச்சை வாரியத்துக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.