மகாராஷ்டிரா: கரும்பு வெட்டும் பெண் தொழிலாளர்களுக்கு கட்டாய கர்ப்பபை நீக்கமா?
நாட்டில் சர்க்கரை ஆலைகள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா இருக்கிறது. இம்மாநிலத்தில் புனே, சோலாப்பூர், கோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கரும்பு வெட்டும் சீசன் தொடங்கும் போது, மகாராஷ்டிராவின் வறட்சியான பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்தோடு கரும்பு வெட்ட வருவது வழக்கம்.
அது போன்று கரும்பு வெட்ட வேலைக்கு வரும் பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் தங்களது வேலைக்கு இடையூராக இருப்பதாக கருதி தாங்களாகவே முன்வந்து கர்ப்பபையை அகற்றிவிடும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. அதுவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பீட் மாவட்டத்தில் இருந்து தொழிலளர்கள் கரும்பு வெட்ட புறப்படும் முன்பு தங்களது கர்ப்பபையை ஆப்ரேசன் செய்து அகற்றி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் பீட் மாவட்டத்தில் இருந்து கரும்பு வெட்ட வந்த பெண் தொழிலாளர்களை சோதனை செய்து பார்த்தபோது, அவர்களில் 843 பெண் தொழிலாளர்கள் தங்களது கர்ப்பபையை அகற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 477 பேர் 30 முதல் 35 வயதுடைய பெண்கள் ஆவர். இது போன்று கர்ப்பபை அகற்றும் ஆபரேசன்கள் தனியார் கிளினிக்களில் நடைபெறுகிறது.
279 ஆபரேசன் தனியார் மருத்துவமனையில் நடந்திருப்பதாகவும், இதற்கு அரசு டாக்டர்களின் ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாக தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. இது போன்ற ஆபரேசன்கள் சம்பந்தப்பட்ட பெண்களின் ஒப்புதலோடு நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.
கர்ப்பபை நீக்க ஆபரேசன் செய்து கொண்ட பலர் இளம் பெண்கள் ஆவர். பீட் மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 1.75 லட்சம் தொழிலாளர்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திற்கு கரும்பு வெட்ட செல்கின்றனர். இந்த வேலை அதிக பணி நேரம் கொண்டதாகும். அதோடு கடுமையான சீதோஷ்ண நிலையை இத்தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தொழிலாளர்கள் கரும்பு வெட்ட புறப்படும் முன்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அவ்வாறு மருத்துவ பரிசோதனை நடக்கும் போது பெண்களின் ஒப்புதல் இல்லாமல் கர்ப்பபை நீக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பி இருக்கிறார்கள். பணி காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பம் உண்டாகாமல் தடுக்கும் நோக்கில் இது போன்று கர்ப்பபை நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது போன்று கரும்பு வெட்டும் தொழிலாளர்களை சோதித்து பார்த்தபோது 3,500 பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதோடு 1,500 கர்ப்பிணி பெண்கள் கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பபை நீக்க விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

பீட் மாவட்டத்தில் இது போன்று நடப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பும் இது போன்று நடந்திருக்கிறது. இது போன்று கரும்பு வெட்ட செல்லும் பெண்கள் மாநில மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு துணை இணையத்தளதில் பதிவு செய்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
ஆனால் அவ்வாறு பதிவு செய்து கொண்டாலும் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு எந்தவித உதவியையும் உடனடியாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மகாராஷ்டிராவில் இருந்து மகாராஷ்டிரா மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கும் கரும்பு வெட்ட செல்கின்றனர். அவர்கள் கரும்பு தோட்டம் இருக்கும் இடத்திலேயே குடில்கள் அமைத்து அதில் தங்கிக்கொண்டு கரும்பு வெட்டுகின்றனர்.