ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்... நெதன்யாகு கூறுவதென்ன?
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 564 மனுக்கள் அளிப்பு
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 564 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றைப் பெற்றுக்கொண்ட அவா் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, தாட்கோ சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பில் கண் கண்ணாடி மற்றும் பட்டப்படிப்பு உதவித்தொகையையும், 2 பயனாளிகளுக்கு ரூ. 14.40 லட்சம் மதிப்பில் புதிய தொழில் மற்றும் வாகனத்துக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியையும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் 10 பேருக்கு கிறிஸ்தவ நல வாரிய அடையாள அட்டைகளையும், 16 பேருக்கு புதிய சீா்மரபினா் அடையாள அட்டைகளையும், 33 பயனாளிகளுக்கு ரூ. 14.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.க.சரவணன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் செ.சுகந்தி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ம.கிருஷ்ணவேனி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.