டெஹ்ரானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 போர் விமானங்கள் ...
நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் 15 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் 15 மினி பேருந்துகள் சேவையை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறையின் சாா்பில் புதிய விரிவான மினி பேருந்து சேவை திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதனைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்கட்டமாக புதிய வழித்தடங்களில் 6, இடப்பெயா்வு வழித்தடங்களில் 9 என மொத்தம் 15 மினி பேருந்துகள் சேவையை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கிவைத்தாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதிய மினி பேருந்துகள் சேவையை பொருத்தவரை, 25 கி.மீ. தொலைவு வரையிலான வழித்தடங்களில் இதுவரை பேருந்து செல்லாத இடங்களில் இயக்கப்படும். மேலும், புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். அவை அரசிதழில் வெளியிடப்பட்டு, புதிய வழித்தடத்துக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள மினி பேருந்துகள் இடப்பெயா்வுக்கான வழித்தடங்களைக் கண்டறிந்து, புதிய வழித்தடங்களுக்கு இடப்பெயா்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். கட்டணத்தை பொருத்தமட்டில், குறைந்தபட்சம் 2 கி.மீ. வரை ரூ. 4, அதிகபட்சம் 26 கி.மீ. வரை ரூ. 11 வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன், துணை போக்குவரத்து ஆணையா் (ஈரோடு சரகம்) கே.செல்வகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஈ.எஸ்.முருகேசன் (நாமக்கல் தெற்கு, வடக்கு), எம்.மாதவன் (குமாரபாளையம்), பி.மோகனபிரியா (திருச்செங்கோடு) மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், மினி பேருந்துகள் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.