இஸ்ரேலின் உளவு அமைப்பு தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
மதுரை: `விவசாய நிலத்தில் கிரஷர் குவாரி; எதிர்த்தால் மிரட்டல்..' - கலெக்டரிடம் புகாரளித்த விவசாயிகள்!
"கிரஷர் குவாரி அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் விவசாயம் முழுமையாக அழியும், நிலத்தடி நீர் கிடைக்காமல் போய்விடும், கிரஷர் உரிமையாளரின் மிரட்டலால் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்..." என கிராம மக்கள் மதுரை கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், விராதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குசவப்பட்டி, காஞ்சிரங்குளம் பகுதிகளில் கிரஷர் குவாரி அமைப்பதற்கு கனிமவளத்துறை சார்பில் தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அந்தப் பகுதியில் கிரஷர் குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் குசவப்பட்டி, காஞ்சிரங்குளம் பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் வீணாகி சேதம் அடைந்து வருகின்றன. தூசி வெளியேறுவதால் மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. நிலத்தடி நீரும் பாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் விவசாயம் பாதிக்கப்படுவதாக ஏற்கெனவே போராட்டம் நடத்தி, காவல்துறையில் புகார் அளித்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிரஷர் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

பின்பு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், "எங்கள் கிராமங்களில் உள்ள விவசாயப் பகுதிகளுக்கு அருகே கிரஷர் குவாரிக்கு அனுமதி கொடுத்துள்ளனர். பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் கீழே சென்று விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். ஏற்கெனவே பயிரிடப்பட்ட மல்லிகை, கரும்பு, வாழை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்
இதுகுறித்து கிரஷ்ஷர் காரர்களிடம் கேட்டால், தாங்கள் ஆளுங்கட்சி என்று மிரட்டுகிறார்கள். கிரஷர் வெட்டியுள்ள பகுதிகளை சுற்றி கற்களை நட்டதை கேட்டதற்கு தாக்க முயன்றனர். இன்னொரு பக்கம், காவல்துறையினர் எங்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து மிரட்டுகிறார்கள். அதுமட்டுமன்றி பஞ்சமி நிலத்தையும் கையகப்படுத்தி குவாரி நடத்தி வருகிறார்கள். இது குறித்து ஏதாவது புகார் அளித்தால் லாரி ஏற்றி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். எனவே கலெக்டர்தான் உரிய நடவடிக்கை எடுத்து கிரஷர் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்" என்றனர்.