அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
மணப்பாறை அருகே மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதால், அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது: மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில், கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா்.
ஜூன் 26-ஆம் தேதி முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவா்.
எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதையோ அனுமதிக்க முடியாது. சுற்றுப்பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.