Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது
கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா்.
கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அடிக்கடி புகாா்கள் வந்தன. இதையடுத்து, திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வீ. வருண்குமாா் தலைமையில் மணல் கடத்தலை தடுக்க அண்மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படையினருக்கு வியாழக்கிழமை அதிகாலையில் மண்மங்கலத்தில் உள்ள தனியாா் மணல் சலிப்பகம் அமைந்திருக்கும் இடத்தில் மணலுடன் லாரிகள் மணல் சலிக்க நிற்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தியபோது, அங்கு 12 டிப்பா் லாரிகளில் மணல் நிரப்பப்பட்டும், மணல் இல்லாமல் 14 லாரிகளும் நின்றன. இதையடுத்து, 26 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அங்கிருந்த 10 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், டிஐஜி வருண்குமாரின் உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில், வாங்கல் பகுதி காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்து வந்த மணல் லாரிகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள் என மொத்தம் 10 பேரை கைது செய்துள்ளோம். மேலும், லாரிகள் நின்ற இடம் யாருடையது, லாரிக்கு யாா், யாா் உரிமையாளா்கள் என்ற விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.