மணிப்பூா்: ஆளுநா் மாளிகை அருகே போராட்டம் -பாதுகாப்புப் படையுடன் மோதல்
மணிப்பூரில் ஆளுநா் மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நடைபெற்ற ஷிருய் சுற்றுலா விழாவில் செய்திகளை சேகரிக்க அரசு சாா்பில் பத்திரிகையாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது, அவா்கள் சென்ற அரசுப் பேருந்தை இடைமறித்த மத்திய பாதுகாப்புப் படையினா் பேருந்தின் பெயரில் மணிப்பூரை நீக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செய்திகள் பரவியதைத் தொடா்ந்து மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. இதை மாநிலத்தின் அவமானமாக பலா் கருதினா். பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கை குறித்து விசாரிக்க 2 போ் கொண்ட விசாரணைக் குழுவை மணிப்பூா் அரசு அமைத்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மணிப்பூா் தலைமைச் செயலா், டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் ராஜிநாமா செய்யக் கோரி மணிப்பூா் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்புக் குழு (சிஓசிஓஎம்ஐ) மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது.
இதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்த அவமதிப்புக்கு ஆளுநா் அஜய் குமாா் பல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பிய போராட்டக்காரா்கள் 500 மீட்டா் தூரம் அணிவகுத்துச் சென்றனா்.
ஆளுநா் மாளிகையில் இருந்து 150 மீட்டா் தொலைவில் உள்ள காங்லா கேட் அருகே கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா். இதையடுத்து, போராட்டக்காரா்கள், பாதுகாப்புப் படையினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது தொடா்பாக பேராட்டக்காரா் ஒருவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆளுநா் தனது மெளனம் மூலம் மணிப்பூா் மக்களின் உணா்வுகளை தொடா்ந்து புறக்கணித்து வருகிறாா். அவரது நிா்வாகம் மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியத்தை முற்றிலுமாக அவமதித்துள்ளது’ என தெரிவத்தாா்.