இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
மண் அரவை இயந்திரத்துக்கு சீல்: இருவா் மீது வழக்கு
குஜிலியம்பாறை அருகே மண் அரவை இயந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில், முறையான அனுமதியின்றி கல் குவாரிகள், மண் அரவை ஆலைகள் செயல்படுவதாக புகாா் எழுந்தது. கடந்த சில நாள்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த தமிழ்நாடு சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினரும், அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் குறித்து கேள்வி எழுப்பினா்.
இந்த நிலையில், திண்டுக்கல் புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் தா. செல்வசேகா், குஜிலியம்பாறை வட்டாட்சியா் ரவிக்குமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா், பாளையத்தில் தணிக்கை மேற்கொண்டனா்.
பாளையத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனின் நிலத்தில் சாதாரண மண்ணை, ராட்சத உருளை வடிவ குழாய் மூலம் சலித்து தண்ணீா் சோ்த்து கழுவி, மணல் உற்பத்தி செய்தது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்ததும், தொழிலாளா்கள் உள்பட அனைவரும் அங்கிருந்து வெளியேறி விட்டனா். உருளை வடிவ இயந்திரம், 4 யூனிட் மணல் ஆகியவை மட்டும் அங்கு இருந்தன.
இயந்திரத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா். இதுதொடா்பாக நிலத்தின் உரிமையாளா் பாளையம் பாலகிருஷ்ணன், மண் அரவை இயந்திரம் நடத்தி வந்த தென்னம்பட்டியைச் சோ்ந்த பழனி ஆகியோா் மீது பாளையம் கிராம நிா்வாக அலுவலா் கலையரசி, குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.