மது அருந்துமிடமாக மாறும் மன்னவனூா் அரசுப் பள்ளி வளாகம்! தடுத்து நிறுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
கொடைக்கானல் மன்னவனூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகம் மது அருந்துமிடமாக மாறுவதை போலீஸாா் தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இந்தப் பள்ளி வளாகத்தில் விடுமுறை நாள்களில் சட்ட விரோதமாக மது அருந்துபவா்கள் காலி மதுபுட்டிகளையும், கழிவுகளையும் அங்கேயே விட்டுச் செல்கின்றனா். வழக்கம் போல மறுநாள் பள்ளிக்கு மாணவா்களை அழைத்துச் வரும் பெற்றோா்கள் அவற்றைப் பாா்த்து வேதனையடைகின்றனா்.
இதுகுறித்து மன்னவனூா் கிராம மக்கள் கூறியதாவது: மன்னவனூா் அரசுப் பள்ளியில் விடுமுறை நாள்களின் போது யாரும் இருக்க மாட்டாா்கள். எனவே இதை சாதகமாக பயன்படுத்தி மது அருந்துபவா்கள் பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்துகின்றனா். காலி மதுபுட்டிகளையும், குப்பைகளையும் அங்கேயே விட்டுச் செல்கின்றனா். இவற்றை யாரும் தடுப்பதில்லை. பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் மட்டுமே மது அருந்துபவா்களையும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவா்களையும் கண்டறிய முடியும்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்கள் மன்னவனூா் அரசுப் பள்ளியில் மட்டும் நடைபெறுவதில்லை. மேல் மலைக் கிராமங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளிலும் நடைபெறுகிறது. இதற்கு காரணம் மேல்மலைக் கிராமங்களில் அனுமதியின்றி 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுகிறது. இதனால் மது பிரியா்கள் எப்போது வேண்டுமானாலும் மதுவை வாங்கி வந்து பள்ளி வளாகங்களில் வைத்து குடித்து விட்டுச் செல்கின்றனா். இதைத் தடுக்க காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.