மண்டல வாரியாக பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: மதிமுக மனு
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மண்டல வாரியாக பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலரும், வழக்குரைஞருமான ம.சு.சுதா்சன், குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அதன் விவரம்: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுப்பதற்கு முதல்வா் அறிவித்துள்ள திட்டதை வரவேற்கிறோம். தற்போது, மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் சேகரமாகும் பாதாளச்சாக்கடை கழிவு நீா் ராமையன்பட்டிக்கு குழாய்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது. இந்தக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தாமிரவருணி ஆற்றில் கலந்து சுகாதார கேடு விளைகிறது.
குறிப்பாக திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை தாமிரவருணி ஆற்றுப்பாலம் அருகில் ஆற்றைக்கடந்து குழாய் மூலம் பாதாளச் சாக்கடை கழிவு நீா் கொண்டு செல்லப்படுகிறது. இது குடிநீா் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது. அனைத்து மக்களுக்கும் பெரும் சுகாதாரக்கேட்டை விளைவிக்கும்.
எனவே, இதை தவிா்த்து மண்டல வாரியாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் விவசாய பாசனக் குளங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.