அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுகாக்குமா தமிழக அரசு?
தமிழர்களின் தொன்மையான நாகரிக வரலாற்றைச் சொல்லும் கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்களையும், மதுரை மாவட்டத்தில் சங்க கால சின்னங்களையும், சமணத் தடங்களையும் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொங்கர்புளியங்குளம் மலை சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மதுக்கூடமாகவும் மாறி வருகிறது என்று புகார் எழுந்து வருகிறது.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தொன்மையான கொங்கர்புளியங்குளம் மலை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
சமணர் படுக்கைகள், சமணர் காலக் கல்வெட்டுகள் மற்றும் பிராமி எழுத்துகள் போன்ற தமிழர்களின் நெடிய வரலாற்றை எடுத்துக்காட்டும் சின்னங்களைக் கொண்ட இந்த மலை, யுனெஸ்கோவும், தமிழக தொல்லியல் துறையும் அங்கீகரித்த தொல்லியல் முக்கியத்துவமிக்க தலமாக விளங்குகிறது.
வரலாற்று ஆய்வாளர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா வந்து செல்லும் இடமாகவும், சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் இயற்கை தெய்வமாக வணங்கும் புனிதமான மலைகளில் ஒன்றாகவும் இந்த மலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபகாலமாக அப்பகுதி சமூக விரோதிகள், மதுகுடிப்பவர்கள் தங்கும் இடமாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "இம்மலையில் பெருமாள் கோயிலும், கீழே காமாட்சி அம்மன் கோயிலும் உள்ளதால் ஆண்டுதோறும் பெருமாள் விக்கிரகத்தைக் கொண்டு வரும் திருவிழா நடத்தப்படுகிறது.
சமணர்கள் வாழ்ந்த பெருமை வாய்ந்த இந்தத் தலம் சிலரின் செயல்களால் மிக மோசமான நிலையைச் சந்தித்து வருகிறது. சீட்டு விளையாடவும், மது அருந்தவும், அங்கேயே படுத்து உறங்கவும் கும்பல் கும்பலாக வருகின்றவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாங்கள் யாரும் அங்குச் செல்ல முடியவில்லை" என்றனர்.
நாம் சென்று பார்த்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. குடித்துவிட்டு வீசும் மது பாட்டில்கள் பாறைகளில் பட்டுச் சிதறிக் கிடக்கின்றன. எங்குப் பார்த்தாலும் கண்ணாடிச் சிதறல்கள், பிளாஸ்டிக் கழிவுகளுடன், சாப்பிட்டுவிட்டுத் தூக்கி வீசிய எச்சில் கழிவுகளும் அந்தத் தொன்மையான மலையை ரணமாக்கி வருகின்றன.
மன அமைதிக்காகவும், வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் மலைக்குச் சென்று வந்த மக்கள் தற்போது செல்லத் தயங்குகிறார்கள். பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் பெண்கள், சிறுவர்கள் அங்குச் செல்லவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அலுவலர் ஆசைத்தம்பியிடம் தெரிவித்தபோது, "இப்பகுதியில் நடைபெறும் மோசமான நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறையினரை உடனடியாக அனுப்புகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த மலைப்பகுதிகள் சீரழியக் கூடாது.
கொங்கர்புளியங்குளம் மலை சாதாரணமான அல்ல. இதற்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு. சிலப்பதிகார நாயகி கண்ணகி சென்ற பயணப் பாதையாகும். மதுரையிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற வழி. தமிழர் பண்பாட்டின் பழமையான வரலாற்றுப் பாதையாகவும் தமிழர்களின் வர்த்தகப் பாதையில் இந்த மலை அமைந்துள்ளது.
சமணர்கள் வாழ்ந்த இந்த இடம், கல்வெட்டுகள் நிறைந்த முக்கியமான தொல்லியல் தலமாகத் திகழ்கிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.
இது தமிழ்நாட்டின் மரபு பொக்கிஷமாகும். அங்குச் சென்று மது குடிப்பவர்களையும், தேவையில்லாமல் அங்குச் சென்று அட்டகாசம் செய்யும் நபர்களையும் தடுத்து நம்முடைய தொன்மையான பகுதியைப் பாதுகாக்க வேண்டியது இப்பகுதி மக்களின் கடமையாகும்" என்றார்.
நம் தொல்லியல் அடையாளங்கள் உள்ள இடங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றாலும் பொது மக்களான நமக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது.