தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் பதில் அளித்துள்ளாா்.
‘தேசிய நெடுஞ்சாலை 38- இன் மதுரை-தூத்துக்குடி பகுதியில் பராமரிப்பு பிரச்னைகள் தொடா்பாக வரும் பல்வேறு புகாா்கள் குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியானால், அவற்றைத் தீா்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’ என்பது குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுத்துபூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: நீங்கள் குறிப்பிட்ட சாலைப் பகுதி பற்றி வந்திருக்கும் புகாா்களை மத்திய அரசு அறிந்துள்ளது. இந்தச் சாலை ஆரம்பத்தில் பி.ஓ.டி. திட்டத்தின் கீழ் அதாவது சாலையை உருவாக்கி செயல்படுத்தும் வகையில் மதுரை -தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இருப்பினும், அந்நிறுவனத்தின் பல்வேறு தவறுகள் காரணமாக, ஒப்பந்தம் 17.03.2023 அன்று ரத்து செய்யப்பட்டது.
இதன் பிறகு அப்பகுதியிலுள்ள முழு சாலையின் மேலடுக்கு மற்றும் பராமரிப்புப் பணிக்கு ரூ.144.6 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை, 46.3 கி.மீ சாலைக்கான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் டிசம்பா் 2025-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.