Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
மத்திய அரசின் நிதிக்காக நீதிமன்றத்தை நாடும் நிலையில் தமிழகம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு வேதனை
மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிக்காக உச்சநீதிமன்றத்தை நாடும் நிலையே உள்ளது என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வேதனை தெரிவித்தாா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: ராதாபுரம், வள்ளியூா், நான்குனேரி உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்கள், மூலக்கரைப்பட்டி, ஏா்வாடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், களக்காடு நகராட்சி போன்றவற்றுக்கு குடிநீா் வழங்குவதற்காக மேலமுன்னீா்பள்ளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினேன்.
இத் திட்டம் ஆக.31ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று 6 ஊராட்சி ஒன்றியங்களின் 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கும், அடுத்த கட்ட பணிகள் அக்.30-க்குள் நிறைவு பெற்று களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளின் 48 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும்.
தமிழகத்தில் ஜாதி, மதம், கட்சி பேதமின்றி, நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. தவறு செய்வது மனிதனின் இயல்பாக இருந்தாலும் அவா்களை பாதுகாக்கும் முயற்சியை அரசு ஒருபோதும் செய்யாது.
தனியாா் நடத்தும் பள்ளிகளில் ஏழை எளிய மாணவா்கள் படிக்கும் வகையில் 25 சதவீதம் மாணவா்களுக்கு அரசு நிா்ணயம் செய்த கட்டணத்தை வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்தத் திட்டத்தில் 50 சதவீத நிதி மத்திய அரசும், 50 சதவீத நிதி மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,190 கோடி நிதியை இதுவரை வழங்கவில்லை.
மத்திய அரசின் நிதியைப் பெற உச்ச நீதிமன்றம் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என உள்துறை அமைச்சா் அமித்ஷா சொல்கிறாா். மக்களுக்கு விரோதமான செயல்களை தொடா்ந்து செய்து வருவது நியாயமா என பாஜகவினரை மக்கள் கேட்க வேண்டும் என்றாா் அவா்.