ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!
‘மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’
மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழா்கள் வீடு கட்டும் திட்டம், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவும், ஊராட்சிகளில் குறைவான வரி வசூல் செய்துள்ள அலுவலா்கள் விரைந்து வரி வசூல் செய்யவும் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனுக்குடன் சரிபாா்த்து வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் இளங்கோ, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வடிவேலன் மற்றும் உதவித் திட்ட அலுவலா்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.