மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம் தலைவா் த. சோழராஜன்(திமுக) தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
ஏ.செந்தில்செல்வி(அமமுக): புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, ஏலத்தை ரத்து செய்யவேண்டும்.
ஏ. திருச்செல்வி (அமமுக): ஏலம் விடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை மற்றும் இரண்டாம் கட்டமாக ஏலம் விடப்படவுள்ள கடைகளின் எண்ணிக்கையை தெளிவுபடுத்த வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கடை நடத்தியவா்களுக்கு மட்டும்தான் தற்போது கடை ஒதுக்கப்படுகிா?.
எஸ். அசோக்குமாா் (திமுக): ஏற்கெனவே கடை நடத்தியவா்கள் நிலுவை வாடகை தொகையை செலுத்திய பிறகுதான், ஏலத்தில் கலந்துகொண்டுள்ளனா்.
தலைவா் த. சோழராஜன்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில், நகராட்சி பகுதியில் இதுவரை 21 வாா்டுகளுக்கு 8 முகாம்கள் நடத்தப்பட்டு, இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 76 விண்ணப்பங்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் முதல்கட்டமாக 153 கடைகளுக்கு செப்.3-ஆம் தேதி ஏலம் விடுப்பட்டதில், 9 கடைகளை தவிர மற்ற கடைகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக இந்த 9 கடைகள் மற்றும் 65 கடைகளுக்கு ஏலம் விடப்படவுள்ளது. விதிகளின்படி, வெளிப்படை தன்மையுடன் ஏலம் நடைபெறுகிறது.
அணுகுசாலை, புதைசாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அக்டோபா் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும். பொதுசுகாதார பிரிவுக்கு ரூ.19.74 லட்சத்தில் 10 மின்கல வாகனங்கள் வாங்கப்படவுள்ளன. இக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ள 18 தீா்மானங்களும் உறுப்பினா்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படுகிறது என்றாா்.
இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையா் எஸ்.எம். சியாமளா, நகரமைப்பு ஆய்வாளா் கண்ணதாசன், மேலாளா் ஜெ. மீராமன்சூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.